Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காந்தி பிறந்த நாளில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசு ரூ.5000

by Editor

கல்வி
 காந்தி பிறந்த நாளில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசு ரூ.5000

 

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021 -2022 ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கிணங்க மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர்2 ம் நாளில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்பெறும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும் , பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். அதேபோன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களே தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், -இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், -மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம்- என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் இருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம்- வீதம் தனியே வழங்கப்பெறும்.

போட்டி நாள் : அக்டோபர் 2 ந் தேதி. பள்ளிப்போட்டி நடைபெறும் நேரம் காலை 10 மணி, போட்டி நடைபெறும் இடங்கள்: தருமமூர்த்தி ராவ்பகதூர் காலவலகண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர், ராமகிருஷ்ண மடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராய நகர், சென்னை மற்றும் குழந்தைகள் தோட்டம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை.

கல்லூரிப்போட்டி நடைபெறும் நேரம் பிற்பகல் 2 மணி. போட்டி நடைபெறும் இடங்கள்: அம்பேத்கர் கலைக் கல்லூரி, வியாசர்பாடி. சென்னை மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை மற்றும் பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே, சென்னை.

மேலும் அரசு அறிவித்துள்ள கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்பெறும்.

Share via
Advertiment

More Stories

Ads