Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கற்பகத் தரு ஸ்ரீராகவேந்திரர்

by Editor

பக்தி கட்டுரை
கற்பகத் தரு ஸ்ரீராகவேந்திரர்


மந்திராலய மகான் என்று போற்றப்படுகிறார் ஸ்ரீராகவேந்திரர். அமைதியும் தயாள குணமுமே பக்திக்கான எளிய வழிமுறைகள் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். அமைதியாக இருக்க இருக்க அதுவே ஆன்மிகம் என்றும் அதுவே இறைவனை அடைவதற்கான வழி என்றும் நமக்குச் சொல்லி வழிகாட்டினார் பகவான் ஸ்ரீராகவேந்திரர்.
‘என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் நான் தருவேன்’ என்பது ராகவேந்திரர் வாக்கு.
இந்த அருள் நிறைந்த பொருள் நிறைந்த வார்த்தையை ராகவேந்திர மகான் எப்போது சொன்னார் தெரியும்தானே.

மந்திராலயத்தில், ஜீவசமாதியில் இறங்கி முக்தி அடைந்தார் ஸ்ரீராகவேந்திரர். அப்படி ஜீவ சமாதியில் இறங்குவதற்கு முன்னதாக, தன் சீடர்களையும் பக்தர்களையும் பார்த்து பகவான் ராகவேந்திரர் அருளிச் சொன்ன வார்த்தைகள் இவை. சத்திய வார்த்தையாக இன்றைக்கும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ராகவேந்திர மகானை யாரெல்லாம் மனமுருகி வேண்டுகிறார்களோ, எவரெல்லாம் விரதம் மேற்கொண்டு அவரை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் தந்தருள்கிறார் ராகவேந்திரர். பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாயஸ;
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

அதாவது, வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர். சத்தியம், நேர்மை, தர்மம், நீதி என்று நம்மை அழைத்துச் செல்பவர். கற்பக விருட்சத்தைப் போன்றவர். காமதேனுப் பசுவைப் போல் வேண்டுவதையெல்லாம் தருபவர். அத்தகைய கருணாமூர்த்தி ஸ்ரீராகவேந்திரரை போற்றி வணங்குகிறேன் என்று பொருள்.
பிருந்தாவன நாயகனை, மந்த்ராலய மகானை, குரு ராகவேந்திரரை மனதார வேண்டுவோம். ஆத்மார்த்தமாக பூஜிப்போம். அற்புத மகான் ராகவேந்திரர் நம் வாழ்வில் பல அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தி அருளுவார்.
தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றித் தந்தருள்வார் பூஜ்யஸ்ரீ ராகவேந்திர மகான்!
 

Share via
Advertiment

More Stories

Ads