Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குலசை தசரா திருவிழா: சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்குத் தடை

by Editor

ஆன்மீகம்
குலசை  தசரா திருவிழா: சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்குத் தடை

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான நாளை நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரலையில் கண்டு தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மைசூரு தசராவிழாவிற்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல லட்சம் பேர் இந்த விழாவில் பங்கேற்பார்கள். காளிவேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து காப்புக்கட்டி பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி, வீதியாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

9ஆம் திருநாளான இன்று இரவு 8.30 மணியளவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார். இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான நாளை நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாளை முதல் 12ஆம் திருநாள் வரையிலும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விழா நிகழ்ச்சிகளை இணையதளங்களில் நேரலையில் கண்டு தரிசனம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads