Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி தாக்குதல்

by Admin

சினிமா
அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி தாக்குதல்

அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி தாக்குதல் - ‘புஷ்பா 2’ நெரிசல் விவகாரத்தில் போராட்டக்காரர்கள் ஆவேசம்

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (டிச.22) ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அல்லு அர்ஜுன் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுனின் வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றம் சுமத்தினார்.

இந்த சூழலில் இன்று (டிச.22) உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அல்லு அர்ஜுனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டினை மாலை 4.45 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் வீட்டில் இருந்த பூத்தொட்டிகளை சேதம் செய்தனர். அதோடு கற்கள் மற்றும் தக்காளியை கொண்டு வீட்டினை தாக்கினர். அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீதேறியே போராட்டக்காரர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புஷ்பா 2 படத்தை பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share via
Advertiment
Ads